Saturday, April 5, 2008

கோழி (comedy)

'சேலம் எப்பங்க வரும்?'

'வாழப்பாடி தாண்டியாச்சு. கொஞ்ச நேரத்தில போய்டலாம்'

விடிகாலைக் குளிர்காற்று காதில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்த்து. கேஸியோ கடிகாரத்தில் லைட் பட்டனை அழுத்தினேன். நியான் ஒளிக்கீற்றுக்கள் விழித்துக்கொள்ள டிஜிட்டலில் 4:46 ஒளிர்ந்தது. முள் கடிகாரத்தில் தூக்கக் கலக்கத்தில் மணிபார்ப்பது கஷ்டம். டிஜிடல்தான் சௌகர்யம்.

"சேலம் வந்தவுடனே சொல்றீங்களா?"

"நான் என்னாங்க சொல்றது? மணிமுத்தாறு வாசனையே எளுப்பி உட்ரும்ல?"

'மணல்மேடு எல்லாம் இறங்குங்க'


மணல்மேடு ஸ்டாப்பில் இருந்து பெரியம்மா வீடு ரொம்ப பக்கம். மெயின் ரோட்டில் நடந்து காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் எதிரே இரண்டாவது அக்ரஹாரத்தில் ஐம்பதடி நடந்தாலே பெரியம்மா வீடுதான். நாளைக்கு பொங்கல் என்பதால் ஐந்தேகால் மணிக்கே ஜன நடமாட்டம் தெரிந்தது. காலிங் பெல் லை அழுத்த, கீச்.. கீச்.. என்று கிளிபோல் கீச்சிட்டது. கதவு ஜன்னல் கம்பிகளில் ஜில்லென்று நீர்த்துளிகள் பூத்து இருந்தன. பெரியம்மா கதவை திறந்தாள்.


'கார்த்திக் யார் வந்திருக்கா பாரு.. எழுந்திரு.. பால் வாங்கிண்டு வா பாக்கலாம்'.


பெரியம்மாவின் முதல் பேரன் கார்த்திக். மிகுந்த புத்திசாலி; பால்யத்திலேயே ஆச்சர்யப்படுத்தும் செயல்களை செய்தான். சுலோகம், பாட்டு, விளையாட்டு, படிப்போடு மந்திரம், தந்திரம் எல்லாம் நன்றாக வந்தது. அவன் செய்ததையெல்லாம் சொல்வதற்கு தனியாக பிள்ளைத்தமிழே எழுதவேண்டும்.. இப்போது முடியாது.

பெரியம்மாவின் சுறுசுறுப்பு அவனுக்கு இயற்கையாகவே வந்திருந்தது. தூக்கத்தை பாயோடு சேர்த்து சுருட்டி பீரோ சந்தில் வைத்தான். எவர்சில்வர் தூக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

'இரு..நானும் வர்ரேன்'.. அவனோடு கிளம்பினேன்.

'சித்தப்பு இன்ஃபோசிஸ்ல ப்ரொஜக்ட் கேட்டிருந்தனே என்னாச்சு?'

'அது வந்து.. ம்ம்.. இன்ஃபோசிஸ் ப்ரொஜக்ட்லாம் சரிபட்டு வராது. டெஸ்டிங்ல போட்டு சாகடிப்பானுங்க'

அமைதியாக என்னை பார்த்தான். 'தெரியும், மேனேஜர்கிட்ட நீங்க எனக்காக பேசியிருப்பிங்க.. அவர் முடியாதுன்னு சொல்லிருப்பார்', என்பதுபோல் இருந்தது அவன் பார்வை. தெருமுக்கிலேயே பால் கடை. பால் தூக்கை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்த தினமலர் பேப்பரை எடுத்தான்.

'சித்தப்பு இங்க பாருங்களேன்..' சிரிப்பை அடக்கிக்கொண்டு பேப்பரை காண்பித்தான்..

பேப்பரின் மூலையில் ஒரு கிரெடிட் கார்டு சைஸில் விளம்பரம். 'முட்டை விற்க சாஃப்ட்வேர் தேவை- தொடர்பு கொள்ளவும்: பழனிக் கவுண்டர் கோழிப்பண்ணை, நாமக்கல்...'.

'சித்தப்பு, சாஃப்ட்வேர் போய் எப்படி முட்டைய விக்கும்?'

இரண்டு பேரும் விழுந்து, விழுந்து சிரித்தோம். கடைக்காரர் விளங்காமல் ஒரு மாதியாக பார்த்தார்.

'கார்த்திக்.. உனக்கு ப்ராஜக்ட் கிடைச்சாச்சுடா'.

'என்ன சித்தப்பு இன்ஃபோசிஸ்ல பாக்க சொன்னா கோழிப்பண்ணைல பண்ண சொல்றீங்களா?'

'ஆமாம்டா.. சீரியஸாத்தான் சொல்றேன்.. இதுலதான் யூசர் இன்டெராக் ஷன் அதிகம் ; நேரா டிசைன், டெவெலப்மண்ட்னு இறங்கிடலாம். '

கார்த்திக் உடனடியாக போன் போட்டான்.

'பேப்பர்ல விளம்பரம் பாத்தோம்..'
'......'
'அப்ப சரிங்க.. கவுண்டர் இருப்பார்னா நாளைக்கு பத்து மணிக்கே வரோம்'

நான் காபி குடித்துக் கொண்டிருந்தேன். கார்த்திக் அயர்ன் போட்டுக்கொண்டே கேட்டான்.

'உங்களுக்கு டை கட்ட தெரியுமா?'

'அட போடா, கோழிப்பண்ணையில கோவனத்தோட நிக்க போறானுங்க. டை வேறயாக்கும்? அங்கெல்லாம் ப்ரொஃபஷனலா அப்ரோச் பண்ணினா வேலைக்காகாது. நான் வேஷ்டியோட வர்ரேன் பார். அங்க 'கோழிப்பண்ணை லெவல்'லையே பேசனும். பிசினஸ் நாலெட்ஜ் இருக்கான்னு பாப்பானுங்க. நாம கோழியபத்தி கான்ஃபிடன்டா பேசினா போதும். இம்ப்ரெஸ் ஆயிடுவானுங்க..'

 இப்ப நாம அவங்கள மாதிரியே பேச ப்ராக்டீஸ் பண்ணனும். அதான் முக்கியம்.. நீ ஒண்ணு பண்ணு.. போய் ஆர்.வி. உதயகுமார் படம் டிவிடி எடுத்துட்டு வா.. அத பாத்து ப்ராக்டீஸ் பண்ணலாம்..’

சின்னக் கவுண்டர், சண்டைக் கோழி, கோழி கூவுது, கவுண்டர் பொண்ணா கோழியா என ஒன்றுக்கு நாலாக டிவிடி வாங்கிவந்தான் கார்த்திக். பார்த்தோம். கார்த்திக் அவ்வபோது நடுவில் படத்தை நிறுத்தி சந்தேகம் கேட்டான்..

"சித்தப்பு ஒரு சந்தேகம்.."

"சந்தேகம்தான் ஒரு சிறந்த மாணவனை உருவாக்கும்.. கேளு.."

"உண்மையிலேயே நீங்க கோழிய பத்தி கத்துக்கத்தான் இந்தப் படம்லாம் எடுத்துட்டு வர சொன்னிங்களா? இல்ல இத சாக்கா வச்சு ஓசில படம் பக்காலாம்னு ப்ளான் பண்ணிட்டிங்களா?"

கடுப்பாகிக் கண்ணயர்ந்தேன்.. சேவல் சண்டையின்போது கோழிப்பட்டிக்கும், சேவலப்பேரிக்கும் ஏற்பட்ட சின்ன வாய்ச்சண்டை பெரிதாகிக் கரிக்கோழிப் பாளையத்துக்கும், முட்டை நாயக்கனூருக்கும் இடையே பெரிய கலவரமாக பரவிஇருந்தது. பஞ்சாயத்துக் கூட்டத்தில் நடுவில் பட்டு வேட்டி, சட்டை, ஜரிகை துண்டுடுடன், வெத்தலை பாக்கு மென்றுகொண்டு விஜயகுமாருக்கு பதிலாக நாட்டாமையாக நான்..... "அது என்னாச்சுன்னாங்க எஜமான், கோளிப்பட்டிகாரன், "முட்டைய விக்கறவம்லாம் முட்டாளுங்க"ன்ன சொல்லிருக்காப்பல.. அதுக்கு முட்டைநாயக்கனூர்க்காரன் "ஏன்டா, ஆசையா வளத்த கோளிய அறிவில்லாம தின்றீகளே நீங்கள்ளாம் மனிசனுங்களா" ன்னுட்டாப்பல... அதுக்கு கோளிப்பட்டிக்காரன 'கோளிக்குஞ்சு பிறக்கறதுக்கு முன்னாடியே முட்டைலயே கொன்னு போடறீங்களே"ன்னுட்டாப்பல...அதுக்கு அவன்......" நிறுத்து என்று கை காண்பித்தேன். என் கையசைவுக்கும், செருமலுக்கும் எட்டு கிராம ஜனங்களும் அமைதியானது எனக்கு பெருமிதம் அளித்தது. தீர்ப்பு சொல்வதற்காக மீசையை பிய்ந்து போகும் அளவுக்கு முறுக்கினேன்..தொண்டையைக் கனைத்தேன்.. "எல்லாரும் என் தீப்ப நல்ல்லா கேட்டுக்குங்க.. இதுவரைக்கும் இந்த கலவரத்தால ரெண்டு தரப்புலயும் பல டஜன் முட்டை பலத்த சேதாரமாகி இருக்கு.. அதனால இனிமே கோழிப்பட்டிக்கும் சேவலப்பேரிக்கும் சேவல் சண்டை கூடாது.. இனிமே அதுக்கு பதிலா திருவிழால கோழி புடிக்கற பந்தயம் மட்டும் நடக்கும்.. இதுதான்டா என் தீப்பு.."..என்றேன். 'ஏய் நாட்டம தீப்ப மாத்தி சொல்லு'…என்ற குரல் கொடுத்தது யார் எனப் பார்ப்பதற்குள் கார்த்திக் கனவைக் கலைத்தான்.

'சித்தப்பு, 'உள்ள' அப்டீங்கறதுக்கு பதிலா கோழிப்பண்ணை லெவல்ல 'உள்ற'ன்னுதான் சொல்லணுமா?'

'ஆமாம்.. கண்ணு.. 'உள்ற'ன்னுதான் சொல்லோணும்.. அதுதான் இந்த நாட்டாம தீப்பு... நாளைக்கு கிளக்கு வெளுக்குறப்ப வண்டிய கட்டிக்கிட்டு கெளம்போணும்.. தூங்கு கண்ணு' என்று எதோ கனவுக் கலக்கத்தில் சொல்லிவிட்டு மறுபடியும் தூங்கிப் போனேன். ராத்திரி ரெண்டு மணிவரைக்கும் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கார்த்திக் பார்த்துவிட்டு ஒரு தூக்கம் போட்டுவிட்டு கார்த்தாலை 7:00 மணிக்கு எழுந்தான்.

ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பினோம்.

'முப்பத்திமூணு கிலோமீட்டர்... ஸ்கூட்டிலையா போலாம்கிற?'

'அங்க, பக்கத்துல எதுவும் பஸ்டாப்பில்ல'

நானே ஸ்கூட்டியை ஓட்ட ஆரம்பித்தேன். சேலம் டவுன் தாண்டத் தாண்ட வீடுகளின் அடர்த்தி குறைந்து மரங்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஹைவேயில் வேகம் பிடித்தேன். இரண்டு பக்கமும் செம்மண் வயல்கள். தூரத்தில் மலைகள். மைல்களை விட வேகமாக மரங்கள் எங்களை கடந்து செல்ல, தண்ணீரில் ஊறிய கரும்பு சக்கையின் வாசம் வயிரை என்னவோ செய்தது.

சாலையின் ஓரத்தில் இருந்த மைல் கற்கள் இன்னும் ஏழு கிலோமீட்டர்கள் தான் என்று காட்டின. இடது பக்கத்தில் உளுந்து பயிர்கள் , உள்ளே தள்ளி ஒரு பம்ப் செட். கிணற்றுக்கு பக்கத்தில் சுவர். சுவற்றில் ஆளுயர கோக் பாட்டிலில் இருந்து திரவம் சிந்த, ஒரு தேன்சிட்டு அதை குடித்துக்கொண்டிருந்தது. 'டொரினோ.. தேன்சுவை' என்று பெரிய எழுத்துக்களில்.

'டேய்.. இன்னுமாடா இந்த ட்ரிங்ஸ்லாம் விக்கறானுங்க?'

'ம்ம்.. விக்கறாங்க.. விக்கறாங்க.. '

'டேஸ்ட் நல்லாருக்குமா?'

'சேலம் மணிமுத்தாறு தண்ணியில்ல...குடிச்சுபாருங்க.. சூப்பரா இருக்கும்'... என் வயித்தெரிச்சலை கொட்டிக்கொண்டான்.

அடுத்து ஒரு பெரிய பாக்குத்தோப்பு, முன்னால் மாமரத்தோடு ஒரு பெரிய வீடு. மதில் சுவரில் லிரில் சோப் விளம்பரம். அருவியில் நனைந்தவாறு லிரில் சோப்பை மார்பில் அழுத்தித் தேய்க்கும் அழகி. திடீரென்று சாலையின் ஓரத்தில் சிதறி இருந்த செம்மண் கற்களில் ஸ்கூட்டி ஏறி இறங்க, கொஞ்சம் தடுமாறினேன். எதிரில் வந்த லாரி டிரைவர் 'ங்ஙொப்பன் மவனே' என்று சர்டிஃபிகேட் கொடுத்துவிட்டு போனான்.

'நானே ஓட்டறேன்'

லிரில் சோப் விளம்பரத்தைப் பார்த்துத்தான் நான் ஸ்கூட்டரை தடுமாறவிட்டதாக கார்த்திக் கற்பனை செய்து கொண்டிருக்கக் கூடும். பதில் பேசாமல் கொடுத்துவிட்டேன்.

அடுத்து ஒரு போஸ்டர்.."அகில இந்திய முட்டை விற்பனையாளர் சங்கத்தலைவர் லெகான் ராமசாமி அவர்களே வருக வருக" - இவண் பிராய்லர் பிச்சாண்டி. போஸ்டர் கவனத்தைக் கலைத்தது தூரத்தில் தெரிந்த காம்பவுண்ட் சுவர். தூரத்தில் மிளகாய்த் தோட்டத்தை ஒட்டி நீளமாக வெள்ளை நிறத்தில் இருந்தது அந்தச் சுவர். பக்கத்தில் நெருங்க சுவரில் சுவரில் முருகர் படம் தெரிந்தது. எதோ ஒரு சுவாமி மடம் போல இருந்தது. முருகர் கையில் வேலும், கொடியும். கொடியில் ஓவர் சைஸில் ஒரு பெரிய சேவல். சேவலுக்குக் கீழே 'பழனிக் கவுண்ட...'

'கார்த்திக்..நிறுத்துடா... இதான் கோழிப்பண்ணை.. அதோ போட்டுருக்கு பாரு '…

பாக்கு மரத்தை நெடுக்கில் பிளந்து எடுத்த மட்டைகளால் செய்யப்பட்ட கேட். முன்பக்கம் தோட்டம். தோட்டத்துக்கு அப்புறம் உள்ளே தள்ளி மாடி வீடு. மாடியில் ஓலைக்கூரை வேயப்பட்டு இருந்தது. தூரத்தில் வீட்டுக்கு பின்பக்கத்தில் கோழிப்பண்ணை இருப்பது போல் தெரிந்தது. கேட் மேலே உட்கார்ந்து இருந்த காகம் எங்களைப் பார்த்து கரைந்துவிட்டுப் பறந்தது. பக்கத்தில் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு உள்ளே நடந்தோம். லேசான ஈரத்துடன் சாணி போட்டு மொழுகிய மெத்தென்ற மண் தரை. நாலே அடி இடைவெளியுடன் உள்ளே போக வழி. இடது பக்கம் சில முருங்கை மரங்களும், ஒரு வேப்ப மரமும். வலது பக்கம் முழுக்க தென்னை மரங்கள், தென்னை மரங்களுக்கு இடையில் பதியன் போட்டு சாணியால் மூடப்பட்ட ரோஜாச் செடிகள். மேலும் உள்ளே நடக்க இடது பக்கத்தில் தண்ணீர்த் தொட்டி. நாலைந்து வான்கோழிகள் தண்ணீர்த் தொட்டி மேலேறி உட்கார்ந்து மந்திரம் ஜபிப்பது எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன. இருபதடி தள்ளி பாதி வழியை அடைத்துக்கொண்டு ஒரு புல்லட். புலித்தோல் டிசைனில் சீட்டு. சிகப்பு நிறத்தில் லாக்கர் பாக்ஸ். ஹேண்டில் பாரில் இரண்டு பக்கமும் அதே சிகப்பில் தோரணம் போன்று வெட்டப்பட்ட ரப்பர் ட்யூப் தொங்கிக் கொண்டிருந்தது.

'இவ்ளோ சின்ன சந்துல எப்படி வெளில எடுக்க முடியும்? ரிவர்ஸ்ல தள்ளிட்டு வரவே அஞ்சு நிமிஷம் ஆகும்'

திடீரென்று 'வௌவ்' என்ற சத்தம். அதிர்ந்து போன நான், நாய் எங்கிருக்கிறது என்று கண்டு பிடிப்பதற்குள் 'கருப்பா சும்மாரு' என்ற குரல். வெள்ளையும் சொள்ளையுமாக கவுண்டர் வந்தார். அவர் குரலின் ஒரு கம்பீரமும் கனிவும் இருந்தது:

'என்னா கண்ணு?..'

'பேப்பர்ல விளம்பரம் பாத்தம்ங்க.. அதான்'

'உள்ற வாங்க'..

உள்ளே போவதற்குள் கருப்பன் என்னை இனம்புரியாத அன்புடன் இரண்டு தடவை உச்சி முகர்ந்து ஒரு தடவை நக்கினான். உள்ளே ஒரு பெரிய ஆபீஸ் டேபிள். மேலே ஒரு புது கம்ப்யூட்டர், மானிட்டர்.


'இந்த கம்ப்யூட்டர், கணக்கு வழக்கெல்லாம் நமக்கு ஒண்ணும் மட்டுப்படல. சின்னவன் தான் ஏதோ பண்ணிட்டு இருக்கான்.. ..ஒக்காருங்க'

அவருக்கு எதிரே சேரில் உட்கார்ந்தோம். வேஷ்டியை தழையவிட்டு கால்களை முடிந்தவரை உள்ளிழுத்துக் கொண்டேன். கருப்பன் சுவாரஸ்யம் குறையவே, திடீரென்று ஏதோ முக்கிய வேலை ஞாபகம் வந்ததுபோல் அவசரமாக எங்கேயோ ஒடினான்.

'நமக்கு ஒரு நாளைக்கு மூணு லோடு அடிக்கணும். எவ்ளோ வருது, எவ்ளோ போகுது, எவ்ளோ இருக்கு, மேல்படிக்கு எவ்ளோ வேணும் இதெல்லாம் எனக்கு வேணும்கறப்ப க்ளீனா தெரியோணும். அவ்ளோதான். இதை நீங்க செய்ஞ்சு தர முடியுமா? '..ஒரு நொடி என் கண்கள் பனித்தன; என் வாழ்க்கையில் எந்த ப்ராஜக்ட் மேனேஜரும் இவ்வளவு தெளிவாக முட்டையை உடைத்தாற்போல பட்டென்று ப்ரொஜக்ட் ஸ்பெக் கொடுத்தது இல்லை.

'பண்ணிரலாம் சார்..இன்வென்டரிதானே .. VB, MS Access- லயே பண்ணிடலாம்'

நான் தொண்டையை செருமி, கார்த்திக் காலில் ஒரு தட்டு தட்டிவிட்டு ஆரம்பித்தேன்.

'என்னா இப்பிடி கேட்டு போட்டிங்க.. கைல முட்டைய வச்சுகிட்டு யாராச்சும் ஆம்லெட்டுக்கு அலைவாங்களாங்க? நம்ம கார்த்திக்கு பி.ஈ ஃபைனல் இயர்ங்க சுளுவாப் பண்ணிருவாப்பலங்க'

'அப்ப... நீங்க பண்ணப்போறது இல்ல.. இவருதாங்கறீங்க.. ம்.ம்.. பொறுப்பா பண்ணுவாரா?'

'அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லீங்க.. கோழிகிட்ட கிடைச்ச வைரக்கல் மாதிரிங்க கார்த்திக்கு.. அமெரிக்கால மட்டும் பிறந்திருந்தான்னா இப்ப எங்கியோ போயிருப்பாங்க'

'இல்ல.. ஏன் கேக்கிறன்னா.. ஏதாச்சும் அவசரம்னா கம்ப்யூட்டர சிக்கீரம் சரி பண்ணனும்ல? விளையாட்டுத்தனம் கூடாதில்ல?'

'என்னா இப்பிடி கேட்டு போட்டிங்க.. நீங்க இப்டி ஒரு கோழித்தூக்கம் போட்டு முழிக்கறதுக்குள்ற ப்ராப்ளம்லாம் நல்லா சரி பண்ணுவாப்பலங்க.. மந்திரிச்சு வுட்ட கோழி மாதிரி ஒரே நினப்பா பண்ணுவாப்பலன்னா பாத்துக்குங்க'

'இல்ல கண்ணு .. நான் ஏன் கேக்கிறேன்னா.. அறியாத புள்ள எதுவாச்சும் தப்பா ப்ராஜக்ட் பண்ணி ஒளுங்கா இருக்குற எங்க கம்ப்யூட்டருக்கு எதுவாச்சும் ஆயிரக் கூடாதில்ல?'

'அட என்னாங்க இப்படி சொல்லி போட்டீக, எங்கயாச்சும் கோழி மிதிச்சு குஞ்சு சாவுங்களா...?'

'அதுல்ல கண்ணு.. சின்ன புள்ளக்கு எப்பிடி எல்லாம் தெரியும்? அனுபவம் பத்தாதில்ல?'

கார்த்திக் புத்திகூர்மையாவன் ஆனதால் உடனடியாக சுதியைப் புரிந்துகொண்டான். 'கோழிப்பண்ணை லெவல்'லில் பேசவேண்டும் ':

'அனுபவம் இல்லன்னா என்னாங்க? வேலை சரியாய் நடக்கணும் அவ்ளோதானே? கோழி குருடா இருந்தா என்னங்க? குழம்பு ருசியா இருந்தா சரிதானே? என்னாங்க நாஞ்சொல்றது?..' சொல்லிவிட்டு 'எப்டி நச்சுனு இம்ப்ரெஸ் பண்ணிட்டேன் பாத்தீங்களா?...' என்று என்னை பெருமையாக பார்த்தான் கார்த்திக்.

சந்தேகத்துடன் பார்த்தார் கவுண்டர்.

'ஆங் .. மறந்துட்டேன் கண்ணு .... இப்ப நீங்க பண்றது.. கம்ப்யூட்டர்லையே முட்டை விக்கரம்னு வைச்சுக்குங்க.. திடீர்னு கம்ப்யூட்டர் வேலை செய்யலனாக்கூட நம்ம வியாவாரம் நின்றாது இல்லீங்களா?'

ஃபுல் ஃபார்மில் இருந்தான் கார்த்திக் :
'அதெப்படிங்க வியாவாரம் நிக்கும்?... சேவல் கூவலன்னா பொளுது விடியாதா என்ன?... என்னாங்க நாஞ்சொல்றது?.'


'நான் என்னா சொல்றேன்னா.....ம்... '. கார்த்திக் அவரை மடக்கிய விதத்தில், கவுண்டர் பதில் சொல்ல முடியாமல் தவித்தார். 'பிரிண்டர கழட்டி அந்தா அங்க வச்சிருக்கேன்..பிரிண்டர் ரிப்பேரா இருக்கு....." என்று ஏதோ சொல்லி யோசனை செய்ய அவகாசம் எடுத்துக்கொண்டார்.

"எதுக்கு வேலை செய்யாத பிரிண்டர சுத்தம் பண்ணி துடைச்சு கம்யூட்டர் டேபிள்ள வச்சிருக்கீங்க? செத்த கோழிக்கு எதுக்கு சிங்காரம்?", விடாமல் கேட்டான் கார்த்திக். 

'..........'

'வேணும்னா ஒரு சின்ன வேலை கொடுத்து பாருங்க..வேலைன்னு வந்துட்டா முடிக்காம தூங்க மாட்டேங்க.. ராக்கோழி கணக்கா முழிச்சு பண்ணுவேணுங்க'

'..ம்... இல்ல .. சரி எவ்ளோ ஆகும் இத செய்யறதுக்கு?'

கார்த்திக் என்னை பார்த்தான்.

'முப்பதாயிரம் ஆகும்க'

'என்னாத்துக்கு கண்ணு அவ்ளோ? சின்ன வேலைதானே?.. ஒரு பத்தாயிரம், பன்னிரண்டாயிரத்துல முடியாதா?.. காலேஜ்ல ப்ராஜக்டுக்கு தானே பண்றீங்க? ஃப்ரீயா பண்ணலாமே ?'

நான் உடனே நீட்டி முழக்கினேன் : 'கார்த்திக்கு ஃப்ரீயாம்.. கேட்டியா இத... சும்மா இருக்கற கோழிக்கு சோத்த போடுவானேன்? அது கொண்டைய கொண்டைய ஆட்டிகிட்டு கொத்த வருவானேன்ல இருக்கு..'

‘பதினஞ்சாயிரதுக்கு சின்னவனையே வச்சு பண்ணிடுவேன்… +2 படிக்கறான்.’

கார்த்திக் என்னை விட அதிகமாக நீட்டி முழக்கினான்: 'அடியாத்தி.. சித்தப்பு கேட்டீகளா இத.. நல்லா இருக்கே.. அவரு பையனையே வச்சு இல்ல பண்ணிப்பாரம்.. கொண்ட சேவல் கூடிவந்தா, பொட்டைக் கோழி கூரையேறி கொக்கரிக்குமாம்-னு சும்மாவா சொன்னாகங்கறேன்'..

'ஏன் சின்னவனுக்கு என்னா? செய்ய முடியாதா?'

'அது எப்படிங்க +2 படிக்கற புள்ளையால செய்ய முடியும்?... உயர உயர பறந்தாலும் ஊர்க்கோழி பருந்தாகுமாங்க?' என்று லெவல்லை மெயின்டெயின் செய்தேன்.

கார்த்திக்கும் விடவில்லை : 'சித்தப்பு கோழி கொழுத்தா கூண்டுல தங்காதாம்.. சரியாத்தான் சொன்னாக பெரியவுக..'

கவுண்டரின் முகம் இறுகியது. உடனே ட்ராக்கை மாத்தி சமாளிக்க முயற்சி செய்தேன்:

'அதாவது கார்த்திக் என்ன சொல்றான்னாங்க.. உங்க பையன் நல்லா பண்ணிடுவாரு.. சந்தேகமில்ல.. ஆனா கோழி தலைல பனங்காய வச்ச மாதிரி, இப்ப நீங்க உங்க பையன் கிட்ட வேலைய கொடுத்துபோட்டு உங்க பையனோட படிப்புக்கு இடைஞ்சலாகிடக் கூடாதுங்க...சின்னக் கவுண்டரோட படிப்புதானே நமக்கு முக்கியம்..இல்லீங்களா?"..

'சித்தப்பு நேத்தி நீங்க சரியா படம் பாக்கவேல்ல.. சின்னக் கவுண்டர் ஸ்கூலுக்கே போல'..

'டேய் அந்த சின்னக் கவுடண்டரை நான் சொல்லலைடா .. நம்ம கவுண்டரோட +2 படிக்கற பையன சொன்னேன்..'

'என்னாது, நேத்தி சின்னக் கவுண்டர் படம் பாத்தீங்களா?'

'அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க.. அவன் ஏதோ ராத்திரி கண் முழிச்சு படம் பாத்த தூக்கக் கலக்கல்துல ஒளர்ரான்.. யாரும் படம் பாக்கல'

'அவன் கண் முழிச்சு பாத்தான்னும் சொல்றீங்க.. அப்பறம் எப்படி யாரும் பாக்கலன்னும் சொல்றீங்க?'

'சித்தப்பு சின்னக் கவுண்டர் பாத்தோமே ..அந்த பம்பரம் சீன்ல கூட சந்தேகம் கேட்டேனே?..'

'மவனே உன்ன என்கவுண்டர்ல போட்டுத் தள்ளிடுவேன்..'

'என்ன சித்தப்பு என் கவுன்டர் உன் கவுண்டர்னு பேசிட்டு, நம்ம கவுண்டர்னு சொல்லுங்க'

'ஐயோ சொதப்பாத ... அது வந்து கவுண்டர் சார், யாரும் சின்னக் கவுண்டர் படத்த ரொம்ப நாளா பாக்காததுனால அவன் பாத்தான்.. நான் முன்னாடியே பாத்துட்டதுனால நான் பாக்கல.. நேத்திதான் அவன் பாத்தான்.. அதுக்கு முன்னாடி அவனும் பாக்கல.. அதனால யாரும் பாக்கலன்னேன்.. சரி அதவிடுங்க.. ப்ரஜெக்டோ பணமோ முக்கியமில்லீங்க.. உங்க மகனோட படிப்புத்தான் முக்கியம்'

கார்த்திக்கும் சேர்ந்து கொண்டான் : 'ஆமாங்க.. அதாங்க சொல்ல வந்தேன்.. உங்க மகனோட படிப்புத்தான் முக்கியம்.. முட்டைய ஒடைச்சு போட்டு பின்னாடி வருத்தப் படறதுல பிரயோசனமில்லீங்க..என்னா நாஞ்சொல்றது?... அப்பறம்.. யாரும் படம் பாக்கலீங்க'

கவுண்டர் புருவத்தை நெறித்தார். நெற்றியை தடவி எதோ சிந்தனையில் ஆழ்ந்தார்.

கார்த்திக் விடுவதாக இல்லை. மனோவசியம் செய்யும் குரலில் கவுண்டரின் காது அருகே சென்றான் : 'நல்லா யோசிச்சுப் பாருங்க கவுண்டரே.. கோழிக்கு கொண்டை முளைச்சாலும் சேவலாகாது இல்லீங்களா?'..

கார்த்திக் காலில் மிதித்தேன்.. ஒருவேளை ஒவர் ஆக்டிங் பண்ணிவிட்டோமோ?..

கவுண்டரும் ராத்திரி நாலு படம் பார்த்ததுபோல் அவர் கண்கள் திடீரென சிவக்க சேரை பின்தள்ளி எழுந்தார். 'டேய் அம்மாசி, மணி இவனுங்கள புடிச்சு கட்டுங்கடா.. இவனுங்க பேசறத பாத்தா கம்ப்யூட்டரு படிச்சவனுங்க மாதிரி தெரிலடா.. கோழிய பத்திதாண்டா தெரியுது. பங்காளி ஆளுங்கதாண்டா.. உளவு பாக்க வந்திருக்கானுங்கடா.. கோழி தீவனத்துல எதாவது கலந்து இருப்பானுங்கடா...' என தமிழ் சினிமா ரேஞ்சுக்கு கற்பனைகளை விரித்துக் கொண்டே போனார்.

அதற்குள் கார்த்திக் ஸ்கூட்டிவரை ஓடியிருந்தான். என்னால் அவன் வேகத்துக்கு ஓட முடியவில்லை. தண்ணீர் தொட்டியை தாண்டும்போது வான்கோழிகள் கூவிக்கொண்டே குறுக்கே பாய்ந்து என்னைத் தடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டன. 'வொள்ள்ர்' .... கருப்பன் என்னை பிடித்து விட்டான். கலவரத்தில் வான்கோழிகள் தறிகெட்டு நாலபுறமும் கூவிக்கொண்டே ஓடின. என் வேஷ்டி கேடயமாக கால் கிலோ தொடைகறி தப்பியது. உடுக்கை இழந்தான் கைபோல ஒரு நொடியில் வேஷ்டியை அவிழ்த்து பொங்கலுக்கு இனாமாக கருப்பனிடம் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடினேன். டான்டெக்ஸ் அண்டர்வேர் என்னை நிராயுதபாணி ஆகாமல் காக்க, இடுக்கண் களைவதாம் நட்பு என கார்த்திக் ஸ்கூட்டியை முறுக்கி வைத்துக்கொண்டு தயாராக இருந்தான்... பின்னால் தாவி உட்கார்ந்து கொள்ள ஸ்கூட்டி வேகம் பிடித்தது.

'கார்த்திக்கு, எனக்காக ரிஸ்க் எடுத்து, வெயிட் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்டா'.... என்று சொல்லிக்கொண்டே மூச்சு வாங்கினேன்.

'சித்தப்பு, நீங்க மாட்டிகிட்டா என்னையும் புடிச்சுருவானுங்களே.. அதனாலதான்.. அதவிடுங்க.. அவனுங்க வர்ரானுங்களா பாருங்க.. நம்மள புடிச்சுடுவானுங்களா?'

திரும்பிப் பார்த்தேன். நல்ல வேளையாக யாரும் தென்படவில்லை. 'அட போடா.. உள்ளயே நம்மள மடக்கல..இனிமே அவனுங்களாவது.. நம்மள புடிக்கறதாவது? கூரையேறி கோழி புடிக்க தெரியாதவனுங்கதான், வானமேறி வைகுந்தம் போப்போறானுங்களா?'

'ஸ்டாப் இட்ட்ட்ட்……' சேலத்துக்கே கேட்பது போல் கத்தினான் கார்த்திக்.